• Home  /  
  • Learn  /  
  • தத்தித்தவழும் தங்கங்களுடன் தத்தளிக்கும் தாய்மார்களே! – கற்றுக்கொடுப்போம் குழந்தைக்கு உணவுண்ணும் முறைகளே
தத்தித்தவழும் தங்கங்களுடன் தத்தளிக்கும் தாய்மார்களே! – கற்றுக்கொடுப்போம் குழந்தைக்கு உணவுண்ணும் முறைகளே

தத்தித்தவழும் தங்கங்களுடன் தத்தளிக்கும் தாய்மார்களே! – கற்றுக்கொடுப்போம் குழந்தைக்கு உணவுண்ணும் முறைகளே

25 Apr 2019 | 1 min Read

Dr. Mrinalini

Author | 86 Articles

 

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைஎன்ற பழமொழியின்படி, நாம் நம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் ஏதொரு பழக்கமும், அவர்கள் தனது இறுதிவரை கடைப்பிடிப்பார்கள். பழக்கங்களைக் கற்றுக்கொடுக்கவும் ஒரு வயது இருக்கிறது. ஒன்று முதல் முன்று வயதிற்கு இடையில் எல்லாவித முக்கியமான பழக்கங்களைக் கற்றுக்கொடுத்தாக வேண்டும். அவற்றுள் முக்கியமானது சரிவர உணவுண்ணும் பழக்கத்தைக் கற்றுக்கொடுப்பதே ஆகும். முடிந்தவரை அத்தனை அடிப்படை பழக்கங்களைக் கற்றுக்கொடுத்த பின்னர் பள்ளியில் சேர்ப்பதே, இக்காலங்களில் சரியான வழியாகும்.

அதன்படி, நாம் நம் குழந்தைகளுக்கு எப்படி உணவுண்ணும் பழக்கத்தைக் கற்றுத் தர வேண்டும் என்று விரிவாக காண்போம். பொதுவான கவலைகளை எப்படி உங்களுக்கு சாதகமாக்கிக்கொள்வது என்பதையும் கேள்வி-பதில் வாயிலாக  நாங்கள் விவரிக்கிறோம்.

 

  1.     பிஞ்சு பருவத்திலேயே உணவையும் அதன் அளவையும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அவர்களுக்குக் கொடுப்பது சரியா?

குழந்தைகள் தவழத்துவங்கும்போதே தன்னை சுற்றியிருக்கும் உலகத்தை ஆராய்ந்து பார்க்க மிகவும்  ஆர்வம் கொள்வர். தங்கள் வாழ்க்கையின் சில பல பகுதியை ஆட்கொள்ள விரும்புவர். அவற்றில் முதன்மையாக குழந்தைகள் உணவுண்ணும் பழக்கத்தையே தேர்வு செய்வர். தனக்கு கிடைத்த சுதந்திரத்தை முதலில் உணவுண்பதில் காட்ட வேண்டும் என்றே கருதுவார்கள். ஆதலால், பெற்றோர்கள் முதலில் அவர்களுக்குக் கிடைத்த புதுவிதமான சுதந்திரத்தை நன்றாக அனுபவிக்க விட வேண்டும். அதே நேரத்தில் பெற்றோர்கள் தந்திரப்பூர்வமாக தனது குழந்தைகளுக்கு சத்துள்ள பலவகையான உணவுகளைப் படைக்க வேண்டும். ஆனால் எதை எப்போது எவ்வளவு உண்ண வேண்டும் என்ற அதிகாரத்தை முதலில் குழந்தைகளுக்குக் கொடுப்பதே உத்தமம்.

 

  1.     பேரம் பேசி குழந்தைகளை உணவுண்ண வைப்பது சரியா?

தவறு!! பேரம் பேச குழந்தைப்பருவம் தகுந்த வயதல்ல. அப்படி செய்தால், சில குழந்தைகள் சத்துள்ள உணவுகளை உண்பது தங்கள் வழக்கமாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மாறாக, அவற்றை ஒப்பந்தத்திற்கு உரியது என்று தவறாக எண்ணுவர். சில பெற்றோர்கள், ‘நீ கேரட் ஒரு கடி கடித்தால் நான் குக்கீஸ் கொடுப்பேன்‘, என்றெல்லாம் கூறுவார்கள். அப்படி சொன்னால் கேரட்டை விட குக்கீஸின் மதிப்பு அதிகம் என்றும் தவறாக பிள்ளைகள் புரிந்து கொள்வர்.

 

  1.     தவழ்கிற குழந்தைகளை ஓரிடத்தில் உட்கார வைத்து உணவூட்டுதல் நிஜமாகவே சாத்தியமா?

இது ஒரு நெருக்கடியான கேள்விதான். எல்லா பெற்றோர்களும் தன் குழந்தைகள் ஓரிடத்தில் மரியாதையுடன் உட்கார்ந்து சத்துள்ள உணவை மட்டுமே, சரியான அளவில் சரியான நேரத்தில் உண்ண வேண்டும் என்றுதான் எல்லோரும் கருதுவர். ஆனால் அது சாத்தியமில்லை. ஓரிரு வயது குழந்தைகள் தவழ்ந்தோடி உணவுண்ணல் என்பது இயற்கையான குணம்தான் என்று முதலில் எல்லா பெற்றோர்களும் ஒப்புக்கொள்ள வேண்டும். இங்கேயும் அங்கேயும் ஓடாமல் ஓரிடத்தில் அமர்ந்து பெரியோர்கள் உண்பதைக் காண அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். அதையும் மீறி நாம் அவர்களை ஓரிடத்தில் உட்கார்ந்து உணவு உண்ணுமாறு வற்புறுத்தினால், அவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவர். சேர்ந்திருந்து உணவுண்ணும் பழக்கத்தை வெறுக்கவும் தொடங்குவார்கள். ஆதலால் என் அறிவுரை என்னவென்றால், முதலில் அவர்களை விதவிதமான சத்துள்ள உணவு வகைகளுக்குப் பழக்கப்படுத்துவோம். பின்பு அவர்களை ஓரிடத்தில் உட்கார வைத்து உணவுண்ண வைப்பதைப் படிப்படியாக கற்றுக்கொடுப்போம்.

குழந்தைகள் உணவைப் பிரியப்பட்டு சாப்பிட வேண்டும். அழுத்தத்திற்குள்ளாகியல்ல… இதை பெற்றோர்கள் மனதில் வைத்துக் கொள்ளவேண்டும்.

 

  1.     குழந்தைகளை சாப்பிட வைக்க, டிவியில் வரும் நிகழ்ச்சியை பார்க்க வைப்பது அல்லது மொபைல் போன் விளையாட கொடுப்பது சரிதானா?

ஆராய்ச்சியின்படி குழந்தைகள் டிவி அல்லது மொபைல் போன் பார்த்துக்கொண்டே சாப்பிட்டால், தான் என்ன சாப்பிட்டோம் என்பது நினைவில் இருக்காது. அதே நேரம், டிவியோ மொபைல்போனோ இல்லாமல் உணவு சாப்பிட முடியாது என்ற கட்டாயமும் குழந்தைகளுக்கு ஒரு கட்டத்தில் உண்டாகிவிடும். எளிதாக சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் டிவி, மொபைல் கருவிகளுக்கு அடிமையாகி விடுவார்கள். அது மிக பெரிய பிரச்சனையை உண்டாக்கிவிடும். ஆகையால், குழந்தைகள் உணவுண்ணும் நேரத்தில் இத்தகைய கருவிகளின் தொடர்பு இல்லாமல் இருப்பதே உத்தமம்.

 

  1.     குழந்தைகளுக்கு மரியாதையாக பெற்றோர்களுடன் உட்கார்ந்து சுயமாக உணவுண்ணும் பழக்கத்தை எப்படி கற்றுத் தர வேண்டும்?

 

ஒன்று முதல் மூன்று வயதிற்குள் குழந்தை தன் தாய் தந்தையைக் கண்டுதான் அடிப்படை பழக்கத்தைக் கற்றுக்கொள்வர். ஒரு குழந்தைக்கு தனது வீடுதான் முதல் பள்ளிக்கூடம்.

 

  1.    முதலில் நான் கூறியதைப்போல, குழந்தைகள் பலவகை சத்துள்ள உணவை உட்கொள்ளும் பழக்கத்தைக் கற்றுத் தர வேண்டும். அதற்கு அவர்களுக்குத் தேவையான சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டும். அளவையோ, நேரத்தையோ பற்றி முதலில் அவர்களைக் கட்டாயப்படுத்த வேண்டாம்.
  2.    பர்கர்ஸ், பீட்சா, உருளைக்கிழங்கு சிப்ஸ், கூக்கீஸ் போன்ற சத்தில்லாத உணவுகளை முதலில் வீட்டிலுள்ள பெரியோர்கள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்துதான் குழந்தைகளும் அவற்றை சாப்பிட தொடங்குகிறார்கள்.
  3.    பெரியோர்கள் அத்தனை பேரும் சேர்ந்து உட்கார்ந்து உணவுண்ணும் விதத்தை முதலில் குழந்தைகளுக்குக் காட்டிக்கொடுக்க வேண்டும். எப்படி சேர்ந்து உட்கார்வது, எப்படி சாப்பிடுவது, எத்தனை நேரத்தில் சாப்பிடுவது என்பதைக் குழந்தைகள் கண்டு பழகியிருக்க வேண்டும்.
  4.    பெரியோர்கள் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடும் நேரத்தில் குழந்தையிடம், ‘பொரியல் ஒரு வாய் வேண்டுமா, குழம்பு ஒரு வாய் வேண்டுமா‘, என்று அவ்வப்போது கேட்டுக்கொண்டே சாப்பிடுங்கள். பின்பு, ஒரு வாய் ஊட்டிவிட ஆரம்பியுங்கள்.
  5.    முதலில் சொன்னபடி, பெற்றோர்களும் சாப்பிடும்போது டிவி நிகழ்ச்சி காண்பதோ, மொபைல் நோண்டுவதோ கூடாது. சாப்பிடும்போது குழந்தையைத் திட்டவே திட்டாதீர்கள். முடிந்த வரை, குழந்தையிடம் நன்றாக உரையாட வேண்டும், அவர்களை அவ்வப்போது பாராட்டவும் வேண்டும். அப்படி செய்யும்போது, அவர்களுக்கு குதூகலமாக இருக்கும். குழந்தையின் மனதில் அப்போதுதான் மரியாதையுடன் இருக்கையில் அமர்ந்து உணவு உண்பதின் மகத்துவமும் புரியும்.
  6.    பெற்றோருடன் சேர்ந்து உட்கார்ந்து உணவுண்ண ஆரம்பித்தவுடன், எப்படி சுயமாக கீழே சிந்தாமல் சாப்பிட வேண்டும்? எப்படி உணவை வாயை மூடிக்கொண்டே மென்று தின்ன வேண்டும்? எப்படி சாப்பிடுவதற்கு முன் மடியில் துணியை விரித்து சாப்பிட வேண்டும்?  எப்படி கீழே சிந்தாமல் சாப்பிட வேண்டும்? இப்படி படிப்படியாக குழந்தைகளுக்கு ஒவ்வொரு பழக்கத்தைக் கற்றுத் தர வேண்டும். எல்லாம் ஒரேடியாக கற்றுக்கொடுக்காதீர்கள். அவர்களுக்கும் புதிதாக ஒவ்வொன்றைக் கற்றுக்கொள்ள, தேவையான கால அளவைக் கொடுங்கள்.
  7.    கற்றுக்கொடுக்கும் நேரத்தில் நீங்களோ உங்கள் குழந்தையோ கோபமாகவோ, வருத்தமாகவோ இருக்கக் கூடாது. குழந்தை சந்தோஷமாக விழிப்போடு இருக்கிறதா என்று பார்த்து சொல்லி கொடுக்க வேண்டும்.
  8.    எல்லா குழந்தைகளும் தன்னுடைய வேலையில் மிகவும் மும்முரமாக இருப்பார்கள். சட்டென்று சாப்பிட வா என்று கூறினால் வர மாட்டார்கள். ஆதலால் முடிந்தவரை 10-15 நிமிடம் முன்னே, ‘நான் பத்து நிமிஷத்துல சாப்பாடு கொண்டு வருவேன், கண்ணு… என்று அவர்களுக்குத் தெரிவிப்பது மிகவும் அவசியம். அப்படி தெரிவிக்கும்போது, தன்னை அறியாமலையே அவர்களுக்கு ஒருவித சந்தோஷம் வரும்.
  9.    ஒவ்வொரு பழக்கத்தைக் கற்றுத்தரும்போதும் அது ஏன் அப்படி செய்ய வேண்டும் என்ற காரணத்தையும் கற்றுத் தரவும்.

 

ஆராய்ச்சியின்படி சரியாக உணவு சாப்பிடும் பழக்கத்தை எல்லா குழந்தைகளும் ஐந்து வயதிற்குள் சரிவர கற்றுக்கொள்வர். ஆதலால், அதற்கேற்றவாறு ஒவ்வொரு பழக்கத்தை படிப்படியாக உங்கள் குழந்தைக்கு கற்றுக்கொடுங்கள்.

ஆனால் முதலில் சொன்னது போலவே, அவசரம் வேலைக்கு ஆகாது. பெற்றோர்கள் சற்று பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

 

குழந்தைகள் தேவையான அளவு உணவை சாப்பிடாமலோ, ஒரு நேர உணவை தவிர்த்தாலோ, என்ன செய்வது?

 

பல நேரமும் பெற்றோர்கள் செய்யும் தவறு என்னவென்றால், அறியாமையில் தாம் சாப்பிடும் அளவை மனதில் வைத்துக்கொண்டு, தன் குழந்தைக்கும் அதே அளவில் பரிமாறிவிடுவர். சிறிதளவே போதும். அவர்களின் வயிறு நிரம்பிவிடும். உங்கள் வேலை சத்துள்ள உணவை பரிமாறுதல் மட்டுமே. உங்கள் குழந்தைதான் அளவை நிர்ணயிப்பார். குழந்தைகள் உணவுண்ணும் அளவைப் பற்றி முதலில் கட்டாயப்படுத்தாதீர்கள். அவர்கள் ஒரு காலமும் பட்டினி இருக்க போவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளவும். அவர்களுக்கு வேண்டியதை தாமே செய்கையில் தெரிவிப்பார்கள்.

 

பின்பு உணவின் வகைகள்… நீங்கள் பரிமாறும் அத்தனை வகையும் இப்போது இல்லையென்றாலும் அடுத்த நாள் நிச்சயமாக சாப்பிடுவார்கள். சாப்பாட்டை வீணாக்கினால் கோபப்படாதீர்கள். ஓரிரு தடவை தவறு நடக்கும். அதே நேரம் உங்கள் குழந்தை உணவுண்ணும் சராசரி அளவு, பசியெடுக்கும் இடைவெளி ஆகியவற்றை முடிந்தவரை யூகிக்கப் பாருங்கள். அப்படி செய்யும்போது, உணவு வீணாக்குவதை எளிதில் தவிர்க்கலாம்.

 

ஒரு காரியம் நினைவிலிருக்கட்டும்: நீங்கள் ஒரு படி உங்கள் குழந்தையுடன் ஒத்துழைத்தால், அக்குழந்தையும் மெல்ல மெல்ல நீங்கள் சொல்வதைக் கேட்டுக்கொள்ளும்.

 

சுருக்கமாக நான் கூறுவது ஒரே கருத்துதான். முடிந்தவரை சத்துள்ள உணவை உங்கள் குழந்தைக்குப் பிடித்தவாறு தயார் செய்யவும். அதே நேரம், எந்தவித கட்டாயமும் இல்லாமல் தனக்கு பிடித்தவற்றை, வேண்டிய அளவில் உண்ணும் அதிகாரம் உங்கள் குழந்தைக்கே தரவும். வரும் 2-3 வருடங்களுக்குள், உங்களுடன் உங்கள் குழந்தையும் சேர்ந்து அமர்ந்து சரிவர சாப்பிடுவார்கள். அதுவரை, அவர்களுக்குக் கிடைத்த அந்த புதுவிதசுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க அனுமதிக்கவும்.   

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.