• Home  /  
  • Learn  /  
  • குழந்தையை அடித்தால் அதன் மனநலம் பாதிக்கப்படுமா?
குழந்தையை அடித்தால் அதன் மனநலம் பாதிக்கப்படுமா?

குழந்தையை அடித்தால் அதன் மனநலம் பாதிக்கப்படுமா?

13 Jan 2020 | 1 min Read

Komal

Author | 138 Articles

 

வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி, குழந்தைகள் அவ்வப்போது அடிவாங்குகிறார்கள். அவர்களை நல்லொழுக்கத்துக்குக் கொண்டுவர அதுதான் மிகச்சிறந்த வழி. இல்லையா? அது எளியவழி, உண்மைதான். ஆனால், அதனால் பயன் உண்டா?

 

பல குழந்தைகள் சின்னச்சின்ன தவறுகளுக்குக்கூட அடிவாங்குகிறவர்கள். எனக்குத் தெரிந்த சில பெரியவர்கள் சிறுவயதில் அடிவாங்கியிருக்கிறார்கள். பெற்றோர் ஏன் தங்கள் குழந்தைகளை அடிக்கிறார்கள், இப்படி அடிவாங்கும் குழந்தைகள் உளவியல்ரீதியில்,  உணர்வுரீதியில் எப்படிப் பாதிக்கப்படுவார்கள் என்று அறிவீர்களா?

 

ஒரு தந்தை அல்லது தாய், தன் குழந்தையை ஏன் அடிக்கிறார்? பல ஆண்டுகளாக, இதுபற்றிப் பல பெற்றோரிடம் கருத்தாய்வு நடத்தியதில் இருந்து அவர்கள் இதற்குப் பல காரணங்களைச் சொல்லியிருக்கிறார்கள். இவற்றில் ஒரு காரணம், அதுவும் குறிப்பிடத்தக்க காரணம், அவர்கள் வளர்ந்தபோது பெற்றோரிடம் இப்படி அடிவாங்கியிருக்கிறார்கள். ஆகவே, குழந்தைகளை நல்லொழுக்கத்துக்குக் கொண்டுவர இதுமட்டும்தான் வழி என்று அவர்கள் எண்ணுகிறார்கள். ‘நான் அடிவாங்கினேன், இப்போது நன்றாக இருக்கிறேன், அதுபோல, என் பிள்ளையும் இப்போது அடிவாங்கினால் நாளைக்கு நன்றாக இருப்பான்’ என்று அவர்கள் நம்புகிறார்கள். “அடிக்காமல் குழந்தையை எப்படி நல்லொழுக்கத்துக்குக் கொண்டுவருவது?” என்பது அவர்களுடைய கருத்து. அவர்களிடம் ஒரு கேள்வி “சிறுவயதில் நீங்கள் அடிவாங்கியபோது, அதை விரும்பினீர்களா? அப்போது உங்கள் உணர்வுகள் எப்படி இருந்தன?” இந்த விஷயம் பல ஆண்டுகளுக்குமுன் நடந்திருக்கும். ஆகவே, அவர்கள் ஒரு நிமிடம் யோசிப்பார்கள், அந்தப் பழைய நினைவுகளில் மூழ்குவார்கள். உடனே, அவர்களுக்கு அந்த உணர்வுகள் மீண்டும் வந்துவிடும்: அந்த பயம், அந்தக் கோபம், அந்த விரக்தி, அந்த காயம், நாம் போதுமான அளவு சிறப்பாக இல்லை என்கிற உணர்வு, சோகம்… அதுமட்டுமா? அடித்தவர்கள்மீது வெறுப்பு!

 

இரண்டாவது காரணம், பதற்றம், கையாலாகாத உணர்வு. அதாவது, தங்கள் குழந்தையின் செயல்திறனை எண்ணிப் பதற்றம், அதைத் தங்களால் கட்டுப்படுத்த இயலவில்லையே என்றெண்ணிக் கையாலாகாத உணர்வு. சமூகம் தங்கள் குழந்தையை எப்படிப் பார்க்குமோ என்றெண்ணிப் பதற்றம், தங்கள் குழந்தையின் வருங்காலம் எப்படியிருக்குமோ என்றெண்ணிப் பதற்றம், அதற்கெல்லாம் மேலாக, ஒருவேளை தங்கள் குழந்தையின் வாழ்க்கை ‘சரியாக’ அல்லது ‘கச்சிதமாக’ அமையாவிட்டால், அதன் பெற்றோர் என்றமுறையில் சமூகம் தங்களை என்ன சொல்லுமோ என்கிற பதற்றம். இத்துடன், அவர்களுடைய மற்ற பதற்றங்கள், அழுத்தங்கள், விரக்திகள் மற்றும் தோல்விகளும் தெரிந்தோ தெரியாமலோ வெளிப்படுகின்றன. அவர்கள் வாழ்க்கையை எண்ணிக் கோபப்படுகிறார்கள், அந்தக் கோபத்தை வெளிப்படுத்த இந்த வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தெரிந்தோ, தெரியாமலோ, அவர்கள் தங்களுடைய கோபத்தைத் தங்கள் குழந்தைகள்மீது காட்டுகிறார்கள். அந்தக் குழந்தைகளால் அதனை எதிர்த்து எதுவும் செய்ய இயலுவதில்லை. இதனால், தங்களுடைய செயல்களைத் தங்களால் நன்கு கட்டுப்படுத்த இயலுகிறது என்று அந்தப் பெற்றோர் எண்ணுகிறார்கள். மற்ற சூழல்களில் அத்தகைய கட்டுப்பாடு அவர்களுக்குக் கிடைப்பதில்லையே.

 

சில பெற்றோர் குழந்தைகளை அடிப்பதன்மூலம் அவர்கள் தங்களைப்பார்த்துப் பயப்படுவார்கள், வேலையில் கவனம் செலுத்துவார்கள், வாழ்க்கையில் எதையாவது சாதிப்பார்கள் என்று நம்புகிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. அடிவாங்கும் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து விலகத்தொடங்குகிறார்கள், தாங்கள் விரும்புவதைச் செய்கிறார்கள், அதைப் பெற்றோரிடமிருந்து மறைத்துவிடுகிறார்கள்! பெற்றோருக்குத் தெரியாமல் ‘தவறு’ செய்யலாம் என்று அவர்களுக்குத் தோன்றிவிடுகிறது. இந்தப் பயமானது குழந்தையின் கவனத்தைச் சிதறடிக்கிறது, அவர்களால் எதிலும் கவனம்செலுத்த இயலுவதில்லை. பயத்தால் அவர்கள் தோல்வியைத் தவிர்க்கக்கூடும், ஆனால், அந்தப் பயணம் மகிழ்ச்சியாக இருக்காது, அவர்கள் தங்களுடைய உண்மையான சாத்தியங்களை எட்ட வாய்ப்புகள் குறைவு.

 

ஆகவே, குழந்தையை வளர்க்கும் பெற்றோர் அதற்கு நல்லொழுக்கத்தைச் சொல்லித்தருகிறேன் என்று கண்டபடி அடித்தால், அதற்குப் பல உளவியல், உணர்வுசார்ந்த பிரச்னைகள் வரக்கூடும். முதலில், குழந்தை தொடர்ந்த பயத்துடன் வாழும். அதைவிட முக்கியமாக, சில குறிப்பிட்ட தூண்டுதல்களின்போது வன்முறையாக நடந்துகொள்வது தவறில்லை என்று அது எண்ணத்தொடங்கிவிடும், தானும் அவ்வாறே நடந்துகொள்ளும். இந்த விஷயம் பள்ளியில் வெளிப்படலாம். உதாரணமாக, வீட்டில் அடிவாங்கும் குழந்தை பள்ளியில் பிறரை அடிக்கலாம். நிதானமாக சொல்லி புரியவைப்பதன் மூலமும் குழந்தைகளை நல்வழிப்படுத்தலாம். 

 

பரிந்துரைத்தவர்: மௌலிகா ஷர்மா. 

பேனர் படம்: irishexaminer

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.

A

gallery
send-btn

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.