• Home  /  
  • Learn  /  
  • அடம்பிடிக்கும் குழந்தையை அமைதிப்படுத்துவது எப்படி?
அடம்பிடிக்கும் குழந்தையை அமைதிப்படுத்துவது எப்படி?

அடம்பிடிக்கும் குழந்தையை அமைதிப்படுத்துவது எப்படி?

4 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

வளர்ந்த நம் குழந்தையை ஷாப்பிங் அழைத்து சென்றால், வருவதற்குள் நிச்சயம் ஒரு வழி ஆகிவிடுவோம் என்பதே உண்மை. கடைகளில் வேடிக்கையாக எவ்வளவு பொருட்கள் இருந்தாலும், நம்முடைய பிள்ளை செய்யும் சேட்டையை தான் எல்லோரும் ரசிப்பார்கள். நாமோ அசடு வழிந்தபடி அவ்விடத்தை விட்டு நகர்வோம். இதனைப்பற்றிய ஒரு சுவாரஸ்யமான பதிவு தான் இது.

 

அடம் ஏன் பிடிக்கிறார்கள்?

அவர்களை, அவர்களுடைய வழியில் விடாமல் வலுக்கட்டாயமாக சில விஷயங்களை திணிக்கிறோம் என நினைத்து அவர்கள் அடம்பிடிப்பார்கள். அவற்றுள் இருக்கும் நன்மைகள் என்னவென பிறகு தான் உணர்வார்கள். இதான் பிள்ளைகள் சேட்டை என்பது. அவர்கள் மனதில் நினைத்த ஒரு விஷயத்தை முடிக்க முடியாத போது இப்படி செய்வார்கள்.

இதற்கு காரணமும் நாம் தான். ஆம், நாம் ஷாப்பிங் செல்வது, நினைத்த பொருட்களை வாங்கவே. அவர்கள் வயதில், அவர்களுக்கு பிடித்த பொம்மையை நினைத்து அதை வாங்க முடியாமல் போகும்போது அடம்பிடித்து அழுது அதனை வெளிப்படுத்துவார்கள் அவ்வளவு தான் வித்தியாசம்.

 

அடம்பிடிப்பது சரியா? தவறா?

நிச்சயம் சரியென்றோ, தவறென்றோ சொல்லிவிட முடியாது. காரணம், இவை யாவும் அவர்கள் கற்றல் நிலைகளின் ஒரு பகுதியாகும். அப்படி இருக்க, அடம்பிடித்தால் எல்லாம் கிடைத்து விடாது, தேவையானதை மட்டுமே நாம் வாங்கி கொடுப்போம் என்பதை அவர்கள் உணர்கிறார்கள். ஒருவேளை அவர்கள் அழும்போது அமைதிப்படுத்துவதற்காக அவர்கள் கேட்பதை நீங்கள் செய்தால், நிச்சயம் அதையே அவர்கள் தொடர்வார்கள்.

 

அவர்கள் அடம்பிடிப்பதை குறைக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

1. தினசரி விஷயங்களை பழக்கப்படுத்துங்கள். உதாரணத்திற்கு, எப்போது தூங்க வேண்டும்? எப்போது சாப்பிட வேண்டும்? என எல்லாவற்றையும் முறைப்படுத்தி அதனை தினமும் பழக்க வேண்டும்.

2. அவர்களை காத்திருக்க வைக்காதீர்கள். உணவு அல்லது உடை என எதுவாக இருந்தாலும் முன்பே திட்டமிட்டு அதனை செய்யுங்கள். இதனால் அவர்களின் பிடிவாதம் குறைய வாய்ப்புள்ளது.

3. எல்லாத்துக்கும் நோ சொல்லாதீர்கள். இது அவர்களுடைய பிடிவாதத்தை அதிகப்படுத்தும். உதாரணத்திற்கு ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை நிச்சயம் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் நல்லது கெட்டதை அவர்கள் புரிந்துக்கொள்வார்கள்.

4. அவர்கள் செய்யும் நல்ல செயல்களை அப்படியே விட்டு விடாமல் பாராட்டுங்கள். அப்போது தான் இன்னும் நிறைய நல்ல செயல்களை செய்து உங்களின் பாராட்டை பெற வேண்டுமென்ற எண்ணம் அவர்களுக்கு வரும். அதேபோல, நல்ல விஷயங்களை செய்யும்போது கட்டியணைத்து முத்தம் கொடுத்து பாசத்தை வெளிப்படுத்துங்கள்.

5. அடம்பிடிக்கும்போது அவர்களை ஊக்குவிக்காதீர்கள். ஏதாவது வேண்டுமென அவர்கள் அடம்பிடித்தால், அதற்கு மாற்று விருப்பத்தை தேர்வு செய்து, அவர்கள் கவனத்தை திசை திருப்புங்கள். அவர்கள் அடம்பிடித்து அமைதியடையட்டும் என வெகு நேரத்துக்கு விட்டு விடாதீர்கள்.

6. முகம் பார்த்து பேச பழகுங்கள். அவர்கள் நம்மை எரிச்சலடைய செய்கிறார்கள் என்று எண்ணி அப்படியே விட்டு விடவும் கூடாது.

7. நம்முடைய தனிப்பட்ட கோபங்களையும் அவர்கள் மீது திணிப்பது சரியாகாது. நமக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும், அவர்கள் அடம்பிடிக்கும்போது அவர்கள் மீது அதை திணிக்க கூடாது.

8. அவர்கள் அடம்பிடிக்கும்போது, அவர்களை விட வீட்டில் இருக்கும் மூத்த பிள்ளைகளுடன் (முதல் குழந்தை) ஒப்பிட்டு பேசவும் கூடாது. ஒருவேளை உங்களுக்கு இரண்டு பிள்ளைகள் என்றால், முதல் பிள்ளைக்கு நல்லது கெட்டதை சொல்லிக்கொடுத்து வளர்த்து, அவர்கள் உதவியுடனே இரண்டாவது குழந்தைக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுக்கலாம். இது அவர்களுக்குள்ளே நட்பையும் ஆரம்பம் முதலே வளர்க்கும்.

 

அடம்பிடிப்பவர்களை அமைதியடைய செய்ய சிறந்த வழி எது?

அவர்கள் அடம்பிடிக்கும்போது பதிலுக்கு நீங்களும் அடம்பிடித்து சரி சமமாக கத்தினால், அதையே வேத வாக்காக நினைத்து கற்றுக்கொள்ள வாய்ப்புண்டு. அதனால் அவர்கள் அடம்பிடிக்கும்போது அமைதியாக முதலில் இருங்கள்.

புத்தகம் காட்டுவது, வேறு இடங்களுக்கு அழைத்து செல்வது, முக பாவனையை மாற்றி சிரிப்பு காட்டுவது போன்றவற்றை செய்து அவர்கள் அடம்பிடிப்பதை குறைக்கலாம்.

அவர்கள் அமைதி ஆன பிறகு, இந்த தீய பழக்க வழக்கத்தால் என்னவெல்லாம் பிறகு பாதிப்பு ஏற்படும் என்பதை மெல்ல புரிய வையுங்கள்.

எப்போது மருத்துவரின் உதவி வேண்டும்?

ஒருவேளை அவர்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் நல்லது கெட்டதை புரிந்துக்கொண்டால் அப்போது அவர்களுக்கு எந்தவித ஆலோசனையும் தேவை இருக்காது. ஆனால், 4 வயதுக்கு பிறகும் அவர்கள் அடம்பிடித்து எல்லோரையும் கஷ்டப்படுத்தினால் நிச்சயம் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது. ஏனென்றால், அடம்பிடிக்கும் குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம். இது பிற்காலத்தில் பாதிப்பையும் ஏற்படுத்தலாம்.

#childbehaviour #parentinggyaan

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.